ச.தமிழினி
LKG B
சாவரா வித்யா பவன் மேல்நிலைப் பள்ளி
கோவை.
கணினித்தமிழ் ஆய்வாளர் செல்வமுரளி
திரு. செல்வமுரளி (1985) … கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு இளம் கணினிப்பொறியாளர் … எப்போதும் (இளமைத்) துடிப்புடன் புதிய புதிய சாதனைகளைக் கணினித்தமிழில் அளிக்கவேண்டுமென்று செயல்பட்டுக்கொண்டிருப்பவர். கணினி வன்பொருள், மென்பொருள் இரண்டிலுமே சாதனைகள் படைத்துக்கொண்டிருப்பவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தினகரன், தினமலர் பத்திரிகைகளிலும் சன் நெட்வொர்க்க்கிலும் வடிவமைப்பு, இணையதளம் உருவாக்கம், கணினிப்பராமரிப்பு ஆகிய பணிகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் சொந்தமாகவே விஷுவல் மீடியா, விஷுவல் மீடியா டெக்னாலஜி என்ற நிறுவனங்களை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறார். பஸ்லைன்ஸ் என்ற இணையதளத்தின் பொறுப்பாளராகவும் இருந்துவருகிறார். ‘தமிழ் வணிகம்’, ‘உலகத்தமிழ் ஒலி’, ‘விவசாயம்’. ‘தேனிக்கூட்டம்’ என்று பல இணையதளங்களை நடத்திவருகிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்யும் பணியிலும் சில காலம் ஈடுபட்டிருந்தார்.
குறைந்த விலையில் தமிழ் மக்களுக்கு டேப்லட் போன்ற சிறுகணினிகளை உற்பத்திசெய்து அளிக்கும் தொழிலில் மிகுந்த பணச்செலவில் ஈடுபட்டார். 2012- இல் சிபேடு என்ற கையடக்கக்கணினியை உருவாக்கினார். சிடிரைவ் என்று பென்டிரைவ் ஒன்றையும் இவர் உருவாக்கினார். அதனுடைய சிறப்பு, 200 வகை மென்பொருள்களைக் கணினியில் நிறுவாமலேயே பயன்படுத்தும் வசதி உண்டு. இணையதளங்களை உருவாக்கி, பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டுவருகிறார். தற்போது குறிப்பாக அலைபேசிகளில் பயன்படும் பலவகை குறுஞ்செயலிகளை உருவாக்கிவருகிறார். இதில் இவரது குறிப்பிடத்தக்க, மிகவும் பாராட்டத்தக்க ஒரு பணி, தமிழகத்துச் சிறுவிவசாயிகளுக்குப் பயன்படக்கூடிய பல குறுஞ்செயலிகளை உருவாக்கி அளித்துவருகிறார். இதனால் விவசாயிகள் மிகவும் பயனடைகின்றனர். மளிகை வணிகர்கள் தங்களது கையடக்கக்கணினிகளில் பயன்படுத்தக்கூடிய தமிழ் மென்பொருள்களையும் உருவாக்கி அளித்துள்ளார். ஆண்டிராய்டு குறுஞ்செயலிகளையும் உருவாக்கி அளித்துவருகிறார். 100-க்கு மேற்பட்ட இதுபோன்ற மென்பொருள்களை உருவாக்கியுள்ளார். டாவுல்சாப்ட் கீமேன் மென்பொருளைப் பயன்படுத்தித் தமிழுக்கான விசைப்பலகைகளையும் உருவாக்கியுள்ளார். தமிழ்நாட்டின் பல கல்விநிறுவனங்களுக்குச் சென்று, அங்குள்ள மாணவர்களுக்குக் குறுஞ்செயலிகள் உருவாக்கத்தில் பயிற்சியளித்துவருகிறார். தமிழகத்தில் கணினித்தமிழ் தொடர்பான எந்தவொரு கருத்தரங்கு, பயிலரங்கு, மாநாடு என்றால் அங்கே இவரை முதல் நபராகப் பார்க்கமுடியும். ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குக் கணினிதொடர்பான பணிகளுக்காகச் சென்று வந்துள்ளார். உத்தமத்தின் சார்பாகக் கணினித்தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரேநாளில் 100 குறுஞ்செயலிகளை உருவாக்கும் பயிலரங்கம் ஒன்றை விரைவில் நடத்தவுள்ளார். உண்மையான கணினித்தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றிவரும் இவருக்குத் தமிழுலகம், குறிப்பாகத் தமிழ்க்கணினி உலகம் முழுமையான ஆதரவுக்கரத்தை நீட்டும் என்று உறுதியாக நம்புகிறேன். கணினித்தமிழ் உலகில் இவர் ஏற்கனவே மிகவும் நன்கறிந்த ஒருவராக இருந்தாலும், எனது முகநூல் பக்கத்தில் இவரை அறிமுகப்படுத்துவதில் நான் மிக்க மகிழ்வடைகிறேன்.
நன்றி – முனைவர் ந.தெய்வசுந்தரம்
கணினித்தமிழ் ஆய்வாளர் ம. பார்கவி
திருமதி ம. பார்கவி (1984) … போடிநாயக்கனூரில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிப்படிப்பிற்குப் பின்னர், திண்டுக்கல் ஆர். வி. எஸ். பொறியியல் கல்லூரியில் பி.இ. (மின்னணுவியல் , தகவல்தொழில்நுட்பம்) படிப்பில் இணைந்து 2006-இல் பட்டம் பெற்றார். அதன்பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் (தமிழ்மொழித்துறையின்) மொழியியல் ஆய்வுப்பிரிவில் நிறுவப்பட்டிருந்த கணினிமொழியியல் ஆய்வுக்கூடத்தில் (Computer assisted Language Technology Lab – CALT) 2007-08 ஆண்டுகளில் கணினிநிரலாக்கராகப் பணிபுரிந்தார். அங்கே முதுகலை, எம்ஃபில் கணினிமொழியியல் படித்த மாணவர்களுக்குக் கணினியின் அடிப்படைகள், நிரலாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு உதவினார். மொழியியல் துறையோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட இவர், பின்னர் அத்துறையில் செயற்பாட்டுமொழியியல் மாணவராகவே இணைந்து (2008-10) , அதில் முதுகலைப் பட்டம் பெற்றார். இதன் பயனாக இவர் கணினிமொழியியல் துறையில் முழுமையாக ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்காக அதனுடைய விஷுவல் ஸ்டுடியோ 10-க்கான (Visual Studio 2010) தமிழாக்கம் (Localization) செய்யும் பணிக்குழுவிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 2010 ஜூலைமுதல் நான் நிறுவியுள்ள என் டி எஸ் லிங்கசாஃப்ட் சொலூஷன்ஸ் நிறுவனத்தில் கணினிமொழியியல் நிரலாக்கராகப் பணியில் இணைந்தார். மென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர் மென்பொருளுக்கான உருவாக்கத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அந்த மென்பொருளின் சிறப்பான பகுதிகளான சொற்பிழைதிருத்தி, சந்திப்பிழைதிருத்தி ஆகியவற்றை உருவாக்குவதிலும் அதற்கு அடிப்படையான தமிழ் உருபன்பகுப்பாய்வியை (Morphological Parser) உருவாக்குவதிலும் அதற்கான தரவை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். தொடர்ந்து அந்த மென்தமிழ் மென்பொருளை வளர்த்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். குறிப்பாக, தமிழுக்கான விசைப்பலகைகள், ஒருங்குறி அல்லாத தமிழ்ப் பனுவல்களை ஒருங்குறியில் மாற்றித் தரும் மொழிக்கருவி (Encoding Converter), சொல்லடைவு (Indexing), ஆய்வாளர்களுக்கு உதவும் துணைநூல்பட்டியல் தயாரிப்பு (Bibliography) போன்ற மொழிக்கருவிகளை உருவாக்குவதில் பெரும்பங்காற்றிவருகிறார். பொறியியலில் பட்டம் பெற்று, பின்னர் செயற்பாட்டுமொழியியலிலும் பட்டம் பெற்ற இவர், ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாகத் தமிழ்க்கணினிமொழியியல் துறையில் தன்னை ஈடுபடுத்திவருகிறார். இவருடைய கணவரும் (திரு. அருண்குமார்) ஒரு மென்பொருள் பொறியாளரே.
நன்றி – முனைவர் ந.தெய்வசுந்தரம்
தமிழறிஞர்கள் சிதம்பரம்
முனைவர் (சிங்காரம்). சிதம்பரம் (1976) … காரைக்குடி நகரைச் சேர்ந்த ஒரு இளம் ஆய்வாளர். அங்கேயுள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் உருவாக்கம்… அங்ககேயே தமிழில் முதுகலை, எம்ஃபில், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். ‘ சோழநாட்டுப் புலவர்களின் இலக்கியக்கொள்கை ( சங்ககாலம் )’ என்ற தலைப்பில் இவரது முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது. கோயில்கலையில் முதுகலைப் பட்டயச் சான்றிதழும் காந்தியச் சிந்தனையில் பட்டயச் சான்றிதழும் பெற்றுள்ளார். கல்வெட்டுகளைப் படியெடுத்தல், விலங்குகள், பறவைகளைப் பதப்படுத்துதல் ஆகியவற்றிலும் முறையான பயிற்சிகள் பெற்றுள்ளார். அப்பல்கலைக்கழகத்தின் மகளிரியல் மையத்திலும் பணியாற்றியுள்ளார். முதுமுனைவர் ஆய்வையும் அங்கே மேற்கொண்டுள்ளார். தற்போது காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலத்தில் இந்தியமொழிகள் , கிராமியக்கலைத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். ‘ முதல்வன்’, ‘ உறந்தைத்தமிழ்வளம்’, ‘ உள்வழி’ என்ற மூன்று ஆய்வு நூல்களை உருவாக்கியுள்ளார். இந்நூல்களை இவர் மின்னூல்களாகவும் இணையதள வெளியீடுகளாகவும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறுந்தகடுகளிலும் தனது நூல்களை ஏற்றியுள்ளார். 40-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை இவர் அளித்துள்ளார். இணையத்தமிழ், உயர்கல்வி வளர்ச்சியில் இணையத்தின் பங்கு, மின்னூல்கள் தயாரிப்பதில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும் போன்ற தலைப்புகளில் கணினித்தமிழுக்கான கட்டுரைகளையும், மகளிர், சங்க இலக்கியம் பற்றியும் கட்டுரைகளையும் உள்ளடக்கி, ஏறத்தாழ 32 ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். உத்தமத்தின் மாநாடுகளில் தொடர்ந்து தனது பங்கை அளித்துவருகிறார். தமிழ் நூல்களை மின்னூல்களாக ஆக்கும்போது ஏற்படும் சிக்கல்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் உள்ளடக்கியதே அவரது ‘ உள்வழி’ என்ற நூலாகும். தமிழில் குறுஞ்செயலிகளின் உருவாக்கம், உள்ளடக்கம், பயன்பாடு பற்றியெல்லாம் மதிப்பீடு செய்து ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். ‘ முதல்வன் .in ‘ என்ற ஒரு மின்னிதழைத் தொடர்ந்து நடத்திவருகிறார். ஆன்மீகம், சுற்றுலா, தலீத்தியம் , இலக்கிய ஆய்வு, இணையம் என்று பல துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற உலகத்தமிழ் இலக்கியமாநாட்டில் பங்கேற்றார். சிங்கப்பூரில் நடைபெற்ற உத்தமம் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை அளித்தார். சென்னையில் இயங்கும் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இளம் அறிஞர்களுக்கான (2010-11 ஆண்டுகளுக்கான) குடியரசுத்தலைவர் விருது இவருக்கு அளிக்கப்பட்டது , இவருடைய ஆய்வுகளுக்கான ஒரு அங்கீகாரமாகும்.. தமிழாய்விற்கும் இணையத்திற்கும் பாலமாகச் செயல்படுகிறார் முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் . இன்றைய கணினியுகத்தில் ஒரு தமிழாய்வாளர் எவ்வாறு தமிழாய்வையும் கணினியையும் இணைத்துச் செயல்படவேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். குடியரசுத் தலைவரின் இளம் அறிஞர் விருது பெற்ற இவர் , மேலும் பல சிறப்புகளைப் பெறுவார் … பெறவேண்டும் என்று வாழ்த்துவோம்.
நன்றி – முனைவர் ந.தெய்வசுந்தரம்
பொருந்தல் அகழ்வாய்வு
பழனிக்கு அருகில் தென்மேற்கில் இருக்கும் பொருந்தல் என்ற கிராமத்தில் 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெல்லும், தமிழ் பிராமி பொறிப்பு கொண்ட புரிமனையும், சவஅடக்கம் செய்யும் தாழிகள் போன்றவை கண்டுடெடுக்கப் பட்டுள்ளன. இவை கி.மு 490 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என்ற அறிவியல் ஆய்வின் முடிவால் தெரியவந்திருக்கிறது.
கண் டெடுக்கப்பட்டுள்ள இந்த சவஅடக்கம் செய்யப்பட்ட தாழிகள் பல அரிய பொருள்களைத் தந்துள்ளன. இரண்டு கிலோ நெல் உள்ளே வைக்கப்பட்டிருந்த நான்கு கால் கொண்ட ஜாடி ஒன்றும், வா-அய்-ரா என்ற தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட இரண்டு மோதிர தாங்கிகள் ஆகியவை இதில் அடக்கம். அமெரிக்காவின் பிடா பகுத் தாய்வு நிறுவனத்தால் இந்த நெல் கி.மு.490 காலத்தைச் சேர்ந்தது என அக்சலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி முறையில் கணக்கிடப்பட்டுள்ளது. ஆய்வு தரும் முடிவுகள், அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது.
தமிழ் மொழிநடை 2000/2500 ஆண்டுகளுக்கு முன் உருவாக வேண்டுமெனில், நெடுங்காலம் முன்னரே மொழி தோன்றியிருக்க வேண்டும். இனக்குழுக்கள் ஒத்திசைவாய் புழங்கியிருக்க வேண்டும். இனக்குழுக்கள் திரண்டு ஓரினமாகுஞ் சூழல் ஏற்பட்டிருக்க வேண்டும். அண்டை அயலோடும், கடல்வழியும், கொடுக்கல் வாங்கல் கூடியிருக்க வேண்டும். பொருளியல் செறிந்திருக்க வேண்டும். எனவே தமிழர்களே உரக்க கூறுங்கள், நாங்கள் பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஆண்டுகளின் வரலாற்றை உடையவர்கள் என்று.
உழைப்புக்குப் பார்வை அவசியமில்லை
தமிழறிஞர்கள் முனைவர் துரை. மணிகண்டன்
தமிழ் மொழியில் ஒரு கணினி நிரலாக்க மொழி (புரோகிராமிங் லாங்வேஜ்)
தமிழறிஞர் முனைவர் ந. அரணமுறுவல்
முனைவர் ந. அரணமுறுவல் (20-10-1949) … தனித்தமிழ்
உணர்வாளர் … தமிழியக்கத் தொண்டர் … ஈழ
விடுதலைப்போராட்டத் தீவிர ஆதரவாளர் … பொதுவுடமைச்
சிந்தனையாளர் … தமிழ்த்தேசியப் போராளி… இவ்வாறு
அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனக்கு 40 ஆண்டுகால நண்பர்
… தோழர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஓஎல்.,
பட்டம், சென்னைப் பச்சையப்பா கல்லூரியில் தமிழில்
முதுகலைப் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில்
தமிழ்மொழித்துறையில் எனது வழிகாட்டுதலில் முனைவர்
பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அவர்களின் தென்மொழி இதழுக்கு ஆணிவேராகச்
செயல்பட்டவர். தென்மொழி இதழுக்காகவே கடலூரிலிருந்து
சென்னையைநோக்கித் தனது வாழ்க்கையைத் திருப்பினார்.
சூளைமேட்டில் ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளியில் தனது
ஆசிரியப்பணியைத் தொடங்கினார். இவரது திருமணத்தைப்
பாவலரேறு அவர்களே முன்னின்று 1971 ஆம் ஆண்டு
நடத்தினார். அரசுப் பள்ளிகளிலும் பணியாற்றிய இவர், பின்னர்
பாவாணர் அச்சகத்தைத் தொடங்கினார். 1977 இல் தமிழீழப்
போராட்டத்தையொட்டி, தமிழகத்தில் தமிழக ஈழ நட்புறவுக்
கழகத்தைத் தொடங்கினார். தமிழீழப் போராளிகளின் அனைத்து
குழுக்களுக்கும் தமிழகத்தில் தேவையான உதவிகள்
அனைத்தையும் செய்து கொடுத்தார். குறிப்பாக, தோழர் பத்மநாபா
அவர்களின் உற்ற தோழராக இருந்தார். பொதுவுடமைச்
சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட இவர், தமிழகத்தின் மார்க்சிய
இயக்கங்கள் அனைத்துடனும் தொடர்புகொண்டிருந்தார்.
சென்னையில் தமிழ்மொழி, தமிழ்த்தேசியம், பொதுவுடமை
இயக்கம், தமிழீழம் தொடர்பான எந்த ஒரு கூட்டமாகவும்
பேரணியாகவும் இருந்தாலும், அவற்றில் முதல் செயல்வீரராக
முன்னின்றவர் தோழர் அரணமுறுவல். சென்னையில்
பேராசிரியர் பொற்கோ, நான், அரணமுறுவல் மூவரும்
இணைந்து தமிழ் பயிற்றுமொழிக் கருத்தரங்கம்,
அனைத்துமொழிகளையும் அரசு அலுவலகமொழிகளாக
ஆக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் மாநாடு, கணினித்தமிழ்
கருத்தரங்கம் போன்றவற்றை நடத்தியுள்ளோம். சில காலம்
தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறையில் உதவி
இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் செம்மொழித் தமிழ்
மத்திய ஆய்வு நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றினார்.
தமிழியக்கத்தின் துணைப் பொதுச்செயலாளராகப் பணியாற்றி,
‘தமிழியக்கம்’ என்ற இதழையும் தொடங்கினார். பாவாணரின்
‘முதன்மொழி’ என்ற இதழை மீண்டும் தொடர்ந்தார். ஆங்கில
எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணி வீரராகச் செயல்பட்டார். உலகத்
தமிழ்க் கழகத்திற்குப் புத்துயிர் ஊட்டினார். மறைந்த
பேராசிரியர்கள் க. கைலாசபதி, பேரா. சிவத்தம்பி
ஆகியோருக்கும் மார்க்சியப் புரட்சிகர எழுத்தாளர் திரு.
கணேசலிங்கன் அவர்களுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார்.
செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வுநிறுவனத்தில்
பணியாற்றிபோது, தமிழ்ப் பேரறிஞர் தி.வே. கோபாலய்யர்
அவர்களுடன் இணைந்து, தொல்காப்பியம் பொருளதிகாரம் –
நச்சினார்க்கினியர், இளம்பூரணர் ஆகியோரின் உரைகளைப்
பதிப்பித்தார்.அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு பேரா. க.
கைலாசபதி அவர்களின் ஆய்வுமுறைகள்பற்றிய ஆய்வாகும்.
அவரது தோளில் எப்போதும் ஒரு பை தொங்கும். அதில் தமிழ்
இயக்கம், பொதுவுடமை இயக்கம், தமிழீழ இயக்கம்
ஆகியவைபற்றிய துண்டுப்பிரசுரங்களும் நூல்களும்
அடங்கியிருக்கும். அவரில்லாமல் சென்னையில் எந்த ஒரு
கூட்டத்தையும் கருத்தரங்கையும் கூட்டத்தையும் நான் நடத்தியது
கிடையாது என்ற அளவிற்கு எனக்கு உதவியவர். சில
மாதங்களுக்கு முன்னர் நான் நெல்லை சென்றிருந்தபோது,
பாளையில் கணினித்தமிழ்பற்றிய ஒரு கூட்டத்திற்கு
ஏற்பாடுசெய்து, என்னை உரையாற்றும்படிக் கூறினார். அவர்
மறைவை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அவரது
துணைவியார் பெயர் திருமதி கண்ணம்மை. ஒரு மகள் ( திருமதி
இறைமொழி) , ஒரு மகன் ( திரு.அறிவுக்கனல்). எனக்கு
மட்டுமல்ல.. பலருக்கும் அவரது மறைவு, ஒரு கையை
இழந்ததுபோல், ஒரு பேரிழப்பாக இருக்கிறது.
நாடக நிலத்திலிருந்து
நாடக நிலத்திலிருந்து நண்பர்களுக்கு வணங்களுடன்,
கடந்த ஓராண்டுக்கும் மேலாய் நம் நிலத்தின் கோமாளி தேடிய மணல்மகுடியின் பயணம் மதுரை கீழக்குயில்குடி சமண முனிகள் உலவும் பாறைவெளியில் நவீன ஓவியர்களின் தூரிகையில் கோமாளி முகம் தேடிய கலைமுகாமில் துவங்கி தமிழ் நிலமெங்கும் அலைந்து சூரங்குடி சாமியாட்டம்,தொன் கோயில் சிற்பங்கள் என மணல்மகுடி கலைஞர்கள் திரட்டிய பதிவுகளுடன் சமவெளி கடந்து ஜவ்வாது மலைக்குன்று கூத்துக் கலைஞர்கள், நீலகிரி மலைவாழ் படுகர்கள்,தோடர்கள், இருளர்கள் என ஆதிப் பழங்குடிகளின் மொழி அலையுறும் மலைக்காட்டுக் கருவிகளின் இசை இழுத்து மூச்சாக்கி,கரிசல் நிலத்தின் ஜிம்ளா முயங்களில் நம் நாடக தாத்த சங்கரதாசு சாமிகளின் ஆசி வழி பிரதியாகி ஒத்திகையில் ஆற்றுகை வடிவமாகிக்கொண்டிருக்கிறது.
நம் ஆதி மூதாதைகளின் இருள்குகை பாறைக் கோட்டோவியங்கள் முதல் தற்கால மெய்நிகர் படைப்புகள் வரை சமூகம் தன்னை கலைவழியே நிகழ்த்தி உயிர்ப்பித்துக் கொள்கிறது.
கலை எனும் நுண்ணுணர்வை அறிந்து துய்க்க முயலாத எந்தச் சமூகமும் தன்னைத்தானே தற்கொலைக்குள் தள்ளி அழித்துக் கொள்கிறது.
இதனாலேயே ஒரு சமூக இருப்பை அழிக்க முயலும் ஏகாதிபத்தியர்கள்,அதன் கலைகளை அழிப்பதன் வழி அந்த மக்கள் பண்பாட்டை அழித்து இறுதியில் முழுமையாய் ஆக்கிரமிக்கிறார்கள்.
சமூகப் பங்கேற்பும்,காப்பாற்றுதலும் இல்லாத கலையும்,பண்பாடும் அழிந்துபடும் என்பதே வரலாற்றுக் கண்டடைவு.
ஆம்,நண்பர்களே….. தமிழ்ச்சமூகத்தின் தொன் சடங்குகளை; சமூக அவலங்களைச் சாடும் கருவிகளாக்கி தன் நவீன உடல் மொழிமூலம் நாடகவெளியில் கொணர்ந்து செயல்படுத்தும் ”மணல்மகுடி நாடக நிலம்” சமூகப் பங்கேற்பையும், காப்பாற்றுதலையும் வேண்டி நிற்கிறது.
கடந்த மாதம் ஒத்திகை துவங்கி இம்மாத இறுதியில் நாடகநிலம் புகும் ”மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி” நாடகத்திற்கு இசைக்கருவிகள்,உடைகள்,நாடகப்பொருட்கள்,ஒத்திகைச்செலவுகள் என பெரும் பொருளியல் நெருக்கடியில் மணல்மகுடி நிற்கிறது.
இந்த பொருளியல் சுமைகளை பரிமாற தார்மீகமாய் உங்கள் அனைவரையும் எங்களோடு கரம் கோர்த்துக்கொள்ள அன்போடும் வேண்டிக்கொள்கிறோம்.
உதவ விரும்பும் நண்பர்கள் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தியோ/மின்னஞ்சலில் தொடர்பு கொண்டோ உதவுமாறு வேண்டுகிறோம்.
வங்கி கணக்கு விபரங்கள்:-
Name:S.Boobalan
Acc.No:20000712871
Bank:State Bank Of India
Branch:Selaiyur
IFSC Code:SBIN0007948
தொடர்புக்கு:-
+91-9994122398/+91-9940672857
manalmagudi.art@gmail.com
இந்த வேண்டுதலை உங்கள் நண்பர்கள்,உறவினர்களுடன் பகிர்ந்து மணல்மகுடியின் தொடர்ந்து கலைச்செயல்பாடுகளை முன்னெடுக்க கைகோருங்கள்.
அன்புடன்
மணல்மகுடிக் கலைஞர்கள்.